மீண்டும் பற்றி எரியும் பங்களாதேஷ்: மரணச் செய்தியால் வெடித்த வன்முறை
பங்களாதேஷில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பின்னரே இந்த வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
32 வயதான ஹாடி, 'இன்குலாப் மஞ்ச்' (Inquilab Mancha) எனும் மாணவர் போராட்டக் குழுவின் சிரேஷ்ட தலைவராவார். அவர் அண்டை நாடான இந்தியாவை பகிரங்கமாகக் கடுமையாக விமர்சித்தவர் எனக் கூறப்படுகிறது.
மரணச் செய்தி
கடந்த வாரம் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு ஹாடி இலக்காகியிருந்தார்.

இதில் படுகாயமடைந்த அவர், சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார்.
அவரது மரணச் செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
கடுமையான சேதம்
பின்னர் அவர்கள் பங்களாதேஷின் பிரதான பத்திரிகைகளான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star) மற்றும் 'ப்ரோதோம் ஆலோ' (Prothom Alo) அலுவலகங்களுக்குக் கடுமையான சேதம் விளைவித்ததுடன், ஒரு கட்டிடத்திற்குத் தீயிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டதுடன், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஊடகவியலாளர்களை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
மேலும், இடைக்கால அரசாங்கம் நாளை (20) தேசிய துக்க தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 7 மணி நேரம் முன்