மாகாணசபைத் தேர்தல் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
சட்ட மாஅதிபர் திணைக்களம்
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையாக யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம்
ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.
தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியும்.

நாடாளுமன்ற செயற்குழு விரைவான தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் செயற்குழு முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு அதற்குரிய யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
தற்போது இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அது குறித்தும் யோசனைகளை முன்வைப்போம்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |