மனிதத்தை மறக்காதிருக்க வேண்டும் என வலியுறுத்தும் உலக மனிதநேய நாளில் ஈழத்தின் நினைவுகள்...
போர், பேரழிவு, வறுமை, இடப்பெயர்வு, பசி, நோய் என மனித வாழ்வை அச்சுறுத்தும் சூழல்களில், மனிதர்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதற்காக தங்களை அர்ப்பணிக்கும் மனிதநேயப் பணியாளர்களையும், மனிதநேயத்தின் அடிப்படை விழுமியங்களையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் நாள் உலக மனிதநேய நாள் அனுசரிக்கப்படுகிறது.
மனித உயிர் எந்த அரசியல் எல்லைகளையும், இன வேறுபாடுகளையும், மத அடையாளங்களையும் விட மேலானது என்பதை உலகிற்கு வலியுறுத்துகிற நாளிது.
மனித நேய நாளின் வரலாறு
2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐ.நா. மனிதநேயப் பணியாளர் செர்ஜியோ வியேரா டி மெல்லோ உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதநேயப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த அந்தச் சம்பவத்தின் நினைவாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாளை உலக மனிதநேய நாளாக அறிவித்தது.
மனிதநேயம் என்பது பேரிடர் நேரத்தில் உணவு வழங்கிற செயல் மாத்திரமல்ல.
காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பது, அகதிக்கு பாதுகாப்பளிப்பது, பசியால் தவிக்கும் ஒருவருக்கு உணவு வழங்குவது, வீடிழந்தவருக்கு தங்குமிடம் ஏற்படுத்துவது, போரால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைப்பது, குழந்தைகளின் கல்வியை பாதுகாப்பது என மனித உயிரின் கண்ணியத்தை காப்பதற்கான ஒவ்வொரு செயலுமே மனிதநேயத்தின் வெளிப்பாடுதான்.
ஈழத்தில் மனிதநேயப் பணி
இந்த நாளை ஈழத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது. பல தசாப்தங்களாகப் போரும் இன வன்முறையும் இடப்பெயர்வும் காணாமல் போதலும் வறுமையும் துயரமும் அனுபவித்த மக்களின் மண்ணாக ஈழம் இருக்கிறது.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்து போர் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்தன.
முகாம்களில் வாழ்ந்த காலங்களும், பதுங்குகுழிகளில் கழித்த இரவுகளும், குண்டுவீச்சுகளின் நடுவே உயிரைக் காத்த நாட்களும் ஈழத் தமிழர்களின் கூட்டு நினைவிலிருந்து இன்னும் அழியவில்லை.
அந்தக் காலங்களில் மனிதநேயப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள், மத அமைப்புகள், உள்ளூர் தன்னார்வலர்கள் என பலர் மக்களின் உயிரைக் காப்பதற்காக ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றினர்.
தங்களுடைய பாதுகாப்பை விட மக்களின் உயிரை முன்னிலைப்படுத்திய அவர்கள், ஈழப் போரின் இருண்ட காலங்களில் மனிதநேயத்தின் விளக்குகளாக ஒளிர்ந்தனர்.
மனிதநேயப் பணியாளர்களே படுகொலை
ஈழத்தின் மனிதநேய வரலாற்றில், மனிதநேயப் பணியாளர்களின் தியாகமும் குருதியால் எழுதப்பட்டுள்ளது. 2006 ஆகஸ்ட் 4ஆம் நாள், கிழக்கு மாகாணம், திருகோணமலை மூதூர் பகுதியில், Action Contre la Faim (ACF) எனப்படும் பிரெஞ்சு மனிதநேய அமைப்பில் பணியாற்றிய 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஈழத்தில் மனிதநேயப் பணியாளர்கள் எதிர்கொண்ட பேராபத்தின் கொடூரமான அடையாளமாகும்.
தண்ணீர், உணவு, வாழ்வாதார உதவி போன்ற அத்தியாவசிய மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவர்கள், தங்களது கடமையைச் செய்து கொண்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர்.
1987 அக்டோபர் 21–22ஆம் நாட்களில் இடம்பெற்ற யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை, ஈழத்தின் மனிதநேய வரலாற்றில் அழிக்க முடியாத குருதிக் கறையாகும். யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.
போரில் ஈடுபடாத நோயாளிகளும், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் பணியாற்றியவர்களும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றப்பட்ட அந்தச் சம்பவம், மருத்துவமனை போன்ற மனிதநேயப் பாதுகாப்பிடங்களின் புனிதத்தன்மை எவ்வாறு போரின் வன்முறையால் சிதைக்கப்பட்டது என்பதற்கு கொடூரமான சாட்சியாக நிற்கிறது.
மருத்துவர்களின் கைகளில் ஆயுதங்கள் இருக்கவில்லை. தாதியர்களின் கைகளில் இருந்தது காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் மருத்துவக் கருவிகளே. ஆனாலும் அவர்கள் போரின் இலக்குகளாகினர்.
மனிதநேய நாளில் யாழ்ப்பாண மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது, போரில் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படை மனிதநேயக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதாகும்.
போருக்குப் பிறகான மனிதநேயப் பணி
ஈழத்தில் போருக்குப் பின்னரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த நிலையில் வாழ்ந்தன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதிலுக்காகக் காத்திருக்கின்றன; மாற்றுத்திறனாளிகளாகிய போரால் பாதிக்கப்பட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், வறுமையில் சிக்கிய குடும்பங்கள் என போரின் காயங்களைத் தாங்கிக்கொண்டு வாழும் மக்கள் ஏராளம்.
நிலமீட்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதார மீட்பு, மனநல மற்றும் சமூக ஆதரவு, கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற துறைகளில் மனிதநேயப் பணிகள் தொடர வேண்டிய அவசியம் உள்ளது.
குறிப்பாக வடக்கு–கிழக்கில் போர் விட்டுச் சென்ற காயங்களை வெறும் பொருளாதார உதவிகளால் மட்டும் ஆற்றிவிட முடியாது; மக்களின் கண்ணியம், உரிமை, நீதி, உண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும்.
போரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்குவது முக்கிய பணியானது.
ஆகவே, ஈழத்தில் மனிதநேயப் பணி என்பது கடந்த காலப் போரின் காயங்களுக்கு மருந்திடும் பணியாக மட்டுமல்லாமல், அநீதியும் அச்சமும் இல்லாத கண்ணியமான எதிர்காலத்தை மக்களுக்காக உருவாக்கும் தொடர்ச்சியான பொறுப்பாகவும் இருப்பதுதான் அவசியமானது.
சக மனிதர்களின் துயரத்தை – வாழ்வை நாம் எவ்வளவு தொலைவில் இருந்து பார்க்கிறோம்? மற்றொருவரின் கண்ணீரை வெறும் செய்தியாகப் பார்க்கிறோமா? அல்லது அது நம்முடைய மனிதப் பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று உணர்கிறோமா? இந்தக் கேள்விதான் இந் நாளின் சாரம்.
ஈழம் மாதிரியான நிலத்தில் எந்தப் பணியிலிருந்தாலும் மனிதநேயத்துடன் செயலாற்ற வேண்டும். போரால் அழிவடைந்த ஒரு தேசத்தின் மீள் கட்டுமானத்திற்கும் எழுச்சிக்கும் அபிவிருத்திக்கும் அத்தகைய ஒரு பணியே அவசியமானது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5