பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு அதிபர் ரணில் இரங்கல்
இரங்கல்
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்று (11) முற்பகல் சென்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) வரவேற்றார்.
இறுதிச் சடங்குகளில் அதிபர் ரணில்
பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், 07 தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுபடுத்தினார்.
மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொள்ள உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
