ராஜபக்சவினர் கொள்ளையடிக்கின்றனர் என்று நம்பினால் அவர்கள் அறிவில்லாதவர்கள்..!
ராஜபக்சவினர் கொள்ளையடிக்கின்றனர் என்று ஒருவர் நம்பினால், அவருக்கு நாடு பற்றியும், அரசியல் பற்றியும் அரச நிர்வாகம் பற்றியும் அறிவில்லாதவராக இருப்பார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " இந்த சந்தர்ப்பத்தில் ராஜபக்சவினர் கொள்ளையடிக்கின்றனர் என்று கூறினால், எவரும் நம்ப மாட்டார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை

கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜபக்சவினருக்கு எதிராக கொள்ளையடிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. கடந்த காலத்தில் வேறு விதமான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டன. இம்முறை அரசாங்கத்தில் ராஜபக்சவினருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.
கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச தற்போதும் கட்சியுடன் மிக வலுவாக இருக்கின்றார். அந்த பலத்துடன் எவ்வித பிரச்சினையும் இன்றி கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை திறனுடன் முன்நோக்கி கொண்டு செல்கிறோம்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எமது கட்சிக்கு இதுவரை எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை. கட்சி என்ற வகையில் எதிர்காலத்திலும் இதே நிலைமை தொடரும் என எதிர்பார்க்கின்றோம்.
அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதா இல்லையா என்பது எம்முடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அது அதிபருக்குரிய பணி", எனக் குறிப்பிட்டார்.