கெரண்டி எல்ல பேருந்து விபத்து : ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்கள்
இறம்பொடை (Ramboda) - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் நுவரெலியா (Nuwara Eliya) - கண்டி வீதியில் உள்ள கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் படுகாயமடைந்தனர்.
பேருந்து விபத்து
இந்தநிலையில் குறித்த பேருந்து விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 6 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
தொடர்புடைய விசாரணை அறிக்கையின் முடிவுக்கமைய, சம்பந்தப்பட்ட பேருந்து சாரதி தேவையான ஓய்வு இன்றி நீண்ட நேரம் பேருந்தை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.
நான்கரை மணி நேர பயணத்திற்கு, குறைந்தது அரை மணி நேரமாவது ஓய்வு தேவை என்று ஆய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணைக் குழு
இருப்பினும், பெறப்பட்ட தகவல்களின்படி, சாரதி வெலிமடை பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் ஓய்வெடுத்துள்ளார்.
அதன்படி, விபத்து நடந்தபோது சாரதி ஆறரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பேருந்தினை செலுத்திச் சென்றுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சாரதி மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை மீறியதாக விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது.
இருப்பினும், விபத்துக்குக் காரணமான அனைத்து காரணிகளுக்கும் சாரதி மட்டுமே பொறுப்பல்ல என்பதையும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
