அமெரிக்காவுடன் ரணில் ரகசிய வேலை - அம்பலத்திற்கு வந்த தகவல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால்கள் ஒத்துழைப்பு மற்றும் சோபா ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தேவையான திட்டங்களை முன்னெடுப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் அதிபர் முன்னெடுத்துள்ளதாக இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசிய வேலை
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ இலாபம் தருகின்ற சிறிலங்கா ரெலிகொம், இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கும் விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
என்.எம்.பெரேரா பொருளாதாரத்தை உயர்த்த பல வேலைத்திட்டங்களை செய்தார். ஆனால் தற்போது எதுவுமே இல்லை. இதனால் இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
என்.சி.சி, சோபா ஒப்பந்தத்தைச் செய்ய இரகசியமாக வேலை இடம்பெறுகிறது. அவ்வாறான நிலை ஏற்படுமானால் அமெரிக்க இராணுவம் வந்து நிலைமை மோசமாகும். அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.
தோட்டத்தொழிலாளர்களை உரிமையாளர்களாக மாற்றி குறிப்பிட்ட நிலங்களை அவர்களுக்கு வழங்கினால் அவர்கள் முழுமூச்சாக பாடுபட்டு டொலரைப் பெறலாம். இதனால் தேயிலை, இறப்பர் மூலம் பெருமளவு டொலரை பெறமுடியும்.
செவிடன் காதில் ஊதிய சங்கு
செவிடன் காதில் ஊதிய சங்குபோல அரசாங்கம் இருக்கிறது. இந்நிலையை மாற்ற வேண்டும்.
லங்கா சமசமாஜக் கட்சி யாழ்ப்பாணத்தில் சாவி சின்னத்தில் எதிர்வரும் காலத்தில் போட்டியிட இருக்கின்றது. இனமத பேதமில்லாமல் அனைவரும் வாக்களித்து எம்மை வெற்றிபெற வைக்க வேண்டும்” - என்றார்.

