அதிபர் ரணிலின் இல்லத்திற்கு தீவைப்பு - பொதுமக்களின் உதவியை கோரும் காவல்துறை (படங்கள்)
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள 14 முக்கிய நபர்களின் அடையாளத்தை கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த 14 பேரின் புகைப்படங்களை காவல்துறை தலைமையகம் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான நெருக்கமான காணொளி காட்சிகளில் இருந்து இந்த முக்கிய நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியிலிருந்து கொழும்பு வந்த போராட்டகாரர்கள் அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், பிரதமர் அலுவலகங்கள் என்பனவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இரவோடு இரவாக அதிபரின் தனிப்பட்ட இல்லத்திற்குள் இன்னுமொரு குழுவினர் வலுக்கட்டாயமாக அத்துமீறி நுழைந்தனர். மேலும் சொத்துக்களை சேதப்படுத்தி அழித்துள்ளனர்.
அழிக்கப்பட்ட சொத்துக்களில் அதிபரின் இல்லத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த நூலகம், பழம்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளடங்குவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியிடப்பட்ட தொலைபேசி இலக்கங்கள்
இந்த சம்பவத்தின் பின்னர், சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0718594950, 0718594929, 0112422176 ஆகிய இலக்கங்களுக்கு வாட்ஸ்அப் ஊடாகவோ அல்லது அழைப்பிலோ தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
