வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் ரணில் வழங்கிய உறுதிமொழி..!
இலங்கையில் அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடலுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதை உறுதிசெய்வதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போதே அதிபர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பு
அதிபர் செயலகத்தை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியமை தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21 ஆவது சரத்தும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 14 (1)(ஆ) உறுப்புரையும் அரசாங்கத்தால் பின்பற்றப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்டு சொத்துக்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க குடிசார் லிபர்ட்டிஸ் யூனியன் வழங்கிய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் இதன்போது ரணில் விக்ரமசிங்க நினைவு கூர்ந்துள்ளார்.
உடமைகளுக்கும் உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வன்முறையற்ற போராட்டங்கள் அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பட்டக்காரர்களுக்கு விகாரமஹாதேவி பூங்கா வளநாகப்படும் - ரணில்
கொழும்பு பிரதேசத்தில் விகாரமஹாதேவி பூங்காவின் வெளி அரங்கம், புதிய நகர மண்டபம், ஹைட் பார்க், கெம்பல் பிட்டிய போன்ற அனைத்து வசதிகளும் அகிம்சை வழியிலான போராட்டங்களுக்காக வழங்கப்படும் என அதிபர் குறிப்பிட்டதாக அதிபர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
´கோட்ட கோ கம´ போராட்டக் களம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்றும், பாதுகாப்புப் படையினரால் அது அகற்றப்படவில்லை என்றும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அனைவரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது உட்பட பின்பற்றப்படும் சட்ட வழிகள் குறித்தும், சட்டமா அதிபரால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
