உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தயார் : சஜித் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் பலத்தை நிலைநாட்டுவதற்கு எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை முன்வைக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.
உப்பு தட்டுப்பாடு
குறைந்தபட்சம் உப்பையேனும் உரிய முறையில் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கு முடியாது போயுள்ளது.
இந்தநிலையில் பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
ஆளும் தரப்பினர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சியை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் தற்போது பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருகிறது.
எதிர்க்கட்சி பெரும்பான்மை வகிக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு ஜனநாயக கட்டமைப்பிற்குள் எடுக்க முடியுமான உச்சபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
