காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்கு...! சிவப்பு எச்சரிக்கை
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகக் கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கனமழை, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (11-06-2026) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாளை (12-06-2026) காலை 10.30 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வலயங்கள்
இதனடிப்படையில் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய கடல் வலயங்கள் உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் 2.5 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கடற்சார் நடவடிக்கைகளின்போது கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |