குறைக்கப்பட்டது நாடாளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணம்
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது.
அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramarathne) தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2025.05.23 அன்று நாடாளுமன்ற அவைக் குழுவு எடுத்த தீர்மானத்தின்படி, நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 4,000 ரூபா ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2,500 ரூபா ஆகவும் 2025.06.01 முதல் வசூலிக்க நாடாளுமன்ற அவைக் குழு முடிவு செய்தது.
ஜூலை மாதம் முதல் நடைமுறை
எனினும், இந்த விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த குழுவால் நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 3000 ரூபா ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2000 ரூபா ஆகவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், காவல்துறை அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லம்
அத்துடன் நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை நாடாளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த விடுமுறை இல்லத்தை முன்பதிவு செய்ய முடிந்ததுடன், சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, இந்தக் கட்டிடத்தில் உள்ள ஒரு பகுதியை எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஊழியர்களுக்குக்கும் ஒதுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல் பணிகள் குறித்தும், நாடாளுமன்ற அவைக் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு பகலில் தற்காலிக தங்குமிடத்திற்கான இடத்தை தயார் செய்வதற்கான அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
