இலங்கைக்கு ஐ.நா இறுக்கம்!! கடைசி வாய்ப்பும் கைநழுவியது
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருடனான இன்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல் விடயங்கள், உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கை சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக நேர்மாறாக நடைபெறுகின்ற விடயம் தொடர்பிலும் பேசியுள்ளோம்.
இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும்போது, இலங்கை கடற்படை அதனைத் தடுக்காமல் அசண்டையீனமாக செயற்படுவது தொடர்பாகவும், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண்களுக்கு வரும் மோசமான பழி வாங்கல் சம்பந்தமாகவும் தெரிவித்துள்ளோம்.
தென்னிலங்கைச் சூழல் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள், உரிமை மீறல் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிய அம்மையாரிடம் கடந்த அறிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தோம்.
இதன்போது, அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்ததால் அவர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்க வேண்டும் எனக் கூறிய ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், இந்தமுறை அறிக்கை கடுமையானதாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்”- என்றார்.

