கடலுக்கு நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு - மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு கடலில் இருந்து இன்று(15) மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெரியகல்லாறு கடலில் நேற்று(14) மாலை 3 இளைஞர்கள் நீராடிக்கொண்டிருந்துள்ளனர்.
அதில் ஒருவரை கடலலை இழுத்துச் சென்ற நிலையில், ஏனைய இருவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர்.
சடலமாக மீட்பு
எனினும் கடலில் மூழ்கியவரை நேற்று இரவு வரையில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை அவர் அக்கடலிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் பெரியகல்லாறு முதலாம் பிரிவின் பொற்கொல்லர் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாலச்சந்திரன் லெசான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் பெரியகல்லற்றில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர் எனவும், அவர் இவ்வருடம் கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றவுள்ளவர் எனவும் அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி காவல்துறையினர் சடலத்தைப் பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


