கோடிக் கணக்கில் புரளும் ரிஷி சுனக் மனைவியின் வருடாந்த வருமானம்
பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் வருடாந்த வருமானம், சொத்து மதிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் ஒரே மகளான அக்ஷதா மூர்த்தி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் டிவிடெண்ட் தொகையாக மட்டும் சுமார் 126.61 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளார்.
செப்டம்பர் மாத இறுதியில் வெளியான தகவல்

செப்டம்பர் மாத இறுதியில் வெளியான தகவல்களின் படி அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 3.89 கோடி பங்குகள் அல்லது 0.93 சதவீத பங்குகளை வைத்திருந்ததாக பங்குச் சந்தைகளில் இன்போசிஸ் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற இதே செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இன்போசிஸ் பங்குகள் 0.55 சதவீதம் உயர்ந்து 1,527.40 ரூபாய்க்கு முடிந்தது. இதன் மூலம் அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 5,956 கோடி ரூபாயாக (சுமார் 721 மில்லியன் டொலர்) உள்ளது.
126.61 கோடி ரூபாய் அளவிலான வருமானம்

இன்போசிஸ் நிறுவனம் 2021-22 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையை இந்த ஆண்டு மே 31 இல் அறிவித்தது, இதில் இன்போசிஸ் முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு உரிமையாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16 ரூபாய் ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டது. இதேபோல் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக இந்த மாதம் ஒரு பங்கிற்கு 16.5 ரூபாயாக அறிவித்தது. இவ்விரு ஈவுத்தொகை மூலம் ஒரு பங்கிற்குச் சுமார் 32.5 ரூபாய் ஈவுத்தொகை அளித்துள்ளது இன்போசிஸ்.
இதன் மூலம் 3.89 கோடி பங்குகளை வைத்துள்ள அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் பங்கு வாயிலாக 126.61 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளார்.
மிகவும் முக்கியமானதாக விளங்கும் இன்போசிஸ் நிறுவனம்

இந்தியாவில் சிறந்த ஈவுத்தொகை அளிக்கும் நிறுவனங்களில் மிகவும் முக்கியமானதாக இன்போசிஸ் விளங்குகிறது. 2021 ஆம் ஆண்டில், அது ஒரு பங்கிற்கு மொத்தம் 30 ரூபாயை ஈவுத்தொகையை வழங்கியது, இதன் மூலம் அக்ஷதா மூர்த்தி 2021 ஆம் ஆண்டில் 119.5 கோடி ரூபாய் வருமானத்தை வழங்கியுள்ளது.
ரிஷி சுனக் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர், ஆனால் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இந்திய குடியுரிமை பெற்றவர். இந்த நிலையில் பிரிட்டனில் வசிக்கும் அக்ஷதா மூர்த்தி பிரிட்டனில் தங்கியிருக்கும் 15 ஆண்டுகள் வரை வரி செலுத்தாமல் வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் இதை வரி ஏய்ப்பு எனப் பிரிட்டன் நாட்டின் அரசு தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.