யாழ் மக்களே அவதானம்..! போதனா வைத்தியசாலை முன் நூதனமுறையில் கொள்ளை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Jaffna teaching hospital ) முன்பாகவுள்ள துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தச் சென்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்று மோசடி செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பளை மாசார் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வேலைக்காக சென்றவேளை நேற்று மாலை தனது துச்சக்கர வண்டியை குறித்த பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக சென்றுள்ளார்.
துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு செல்ல முற்பட்ட போது எதிரே வந்த ஒருவர் 'உன்னை எனக்கு தெரியும்' என்று கூறி அடாவடித்தனமாக குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்தைத் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் குறித்த குடும்பஸ்தருக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரியாததால் தான் தொலைபேசி பாவிப்பதில்லை எனது தொலைபேசி இலக்கத்தை தர முடியாது என கூறியுள்ளார்.
உடனே எதிரே நின்றவர் குடும்பஸ்தரின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அவரது பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பணப்பையை இழந்தவர் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் கடமையிலிருந்தவரிடம் நடந்த சம்பவத்தை கூறி தனது பணப்பையை ஒருவர் பறித்துச் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு துவிசக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் இருந்தவர் பணப்பையை பறித்துச் சென்றவர் என்னுடைய தம்பி என்றும் நாளைய தினம் நான் அந்த பணப்பையை அவரிடமிருந்து பெற்றுத் தருகிறேன் நீங்கள் இப்போது வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறி 500 ரூபாய் பணத்தினை கொடுத்து அவரை அனுப்பியுள்ளார்.
இரவு நேரமாகையால் வேறு வழி தெரியாத குடும்பஸ்தர் பேருந்துக்காக அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு சென்றுள்ளார்.
மறுநாள் காலை பணத்தை இழந்த குடும்பஸ்தர் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்திற்குச் சென்று தனது பணப்பையையிலிருந்த வங்கி ஏ.ரி.எம் அட்டை, அடையாள அட்டை அடங்கிய பணப்பையை தருமாறு கேட்ட போது தம்பியிடம் வாங்கியதாக துவிச்சக்கர வண்டி நிலையத்திலுள்ளவர் குடும்பஸ்தரிடம் கொடுத்துள்ளார்.
பணப்பையை வாங்கிப் பார்த்த குடும்பஸ்தருக்கு அதிர்ச்சி காத்திருந்தது குறித்த குடும்பத்தார் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னால் இயன்ற வேலைகளை செய்து தனது தேவைக்காக சேர்த்து வைத்திருந்த எண்ணாயிரம் ரூபாய் பணம் சூறையாடப்பட்டுள்ளதோடு அவரது ஏ.ரி.எம் வங்கிக் கணக்கிலிருந்த 26 ஆயிரம் ரூபாய் பணம் என்பன களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பணப் பையை மீள வழங்கிய துவிச்சக்கர வண்டி நிலையத்திலுள்ளவரிடம் குடும்பஸ்தர் கேட்டபோது ஆயிரம் ரூபாய் பணத்தை பணப்பையினுள் வைத்து கொடுத்து, எனது தம்பியை பிடிக்க முடியாது நீ இதை கொண்டு போ என்று கூறியுள்ளார்.
தனது பணம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்திற்கு சென்று முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை பதிவு செய்ய காவல்துறையினர் குறித்த துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் பணத்தை பறித்தவர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் அவரை உடனே கைது செய்யுமாறும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணன் என்று கூறிய துவிச்சக்கர வண்டி நிலையத்தில் கடமையில் இருந்தவரையும் விசாரணை செய்யுமாறும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துவிச் சக்கரவண்டி பாதுகாப்பு நிலையத்தில் கடமையிலிருந்தவரும் பணத்தைப் பாறித்துச் சென்றவரும் திட்டமிட்டு இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிய வருகிறது.
குறித்த துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் அண்மையில் பணப்பையை பறித்து சென்ற நபரால் நபரால் ஒருவரின் கையடக்க தொலைபேசியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம் பெறுவதால் பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
