ட்ரம்ப் - புட்டின் இடையேயான சந்திப்புக்கான இடம் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆகியோர் சந்திப்பதற்கான இடம் உறுதிப்படுத்தப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆங்கரேஜில் உள்ள அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க விமானப் படையின் ஒருங்கிணைந்த தளமான எல்மென்டார்ஃப் - ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் ட்ரம்ப் – புட்டின் இடையேயான சந்திப்பு வெள்ளிக்கிழமை (15) இடம் பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சந்திப்பில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.
உக்ரைன் போரை முடிவு
இந்நிலையில், முன்னர் ரஷ்யாவும் உக்ரைனும் ஆக்கிரமித்த பகுதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவை உக்ரைன் ஜனாதிபதி வோலோதிமிர் ஸெலென்ஸ்கி நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தத்திற்காக டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்கும் படியான ரஷ்ய முன்மொழிவை உக்ரைன் நிராகரிப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உக்ரைனின் எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
