'க்ரைய்மியா' விடுதலையுடனே யுத்த முடிவு - உக்ரைன் அதிபர் சூளுரை
'க்ரைய்மியா' விடுதலையுடனே யுத்த முடிவு
உக்ரைன் மீதான யுத்தமானது, க்ரைய்மியா பிராந்தியத்தின் விடுதலையுடனே முடிவுக்கு வர வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிரைய்மியா பிராந்தியம் உக்ரைனுக்கு சொந்தமானது எனவும் அதனை விட்டுக்கொடுக்க தயாரில்லை எனவும் நேற்றிரவு ஆற்றிய விசேட உரையில் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.
விட்டுக்கொடுக்க தயாரில்லை
கிரைய்மியா பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய விமானப் படைத்தளத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் நேற்றிரவு ஆற்றிய உரையில் உக்ரைன் அதிபர் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் க்ரைய்மியா பிராந்தியத்தில் அவ்வாறான குண்டு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் உக்ரைனின் இந்த தகவல்கள் பொறுப்பற்றது எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
க்ரைய்மியா பிராந்தியம் உக்ரைனின் உத்தியோகபூர்வ பகுதி என்ற போதிலும் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த பிராந்தியத்தை ரஷ்யா தமது நாட்டுடன் இணைத்திருந்தது.
ரஷ்ய விமானப் படைத்தளத்தில் அடுத்தடுத்து வெடிச் சம்பவங்கள்
இந்த நிலையிலேயே ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் பிரபலமான கடலோர சுற்றுலாத் தளத்திற்கு அருகில் உள்ள ரஷ்ய விமான நிலையத்திலேயே தொடர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன், கடற்கரையில் இருந்தவர்கள் தப்பியோடும் காட்சிகளும் அதில் காணப்பட்டுள்ளன.