மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை - சஜித் பிரேமதாச
மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை.எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணொளி ஒன்றை வெளியிட்டு இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளார்.
கூட்டு அரசியல் சூழ்ச்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் கோயபல்ஸைப் பயன்படுத்தி ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பி சமூகமயப்படுத்தியது போன்று தற்போதைய இலங்கை அதிபரும் பொய்ப் பிரசாரம் செய்யும் கூட்டு அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உண்மையான ஊடகவியலாளர்களைக் கூட இழிவுபடுத்தி, தங்களை ஊடகவியலாளர்கள் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவின் மூலம் உண்மைகளை பொய்யாகவும், பொய்களை உண்மையாகவும் மாற்றும் பெரும் பிரசாரம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள,அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியதாக தற்போதைய அரசாங்கம் பொய்யான செய்திகளை உருவாக்கி வருகிறது.
மக்கள் ஆணை இல்லாத, மக்களால் நிராகரிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது.
எனவே இவ்வாறான பொய்யான மற்றும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.
பிரதமர் பதவி தொடர்பாகவே அல்லது தேசிய அரசாங்கம் தொடர்பாகவே அல்லது அமைச்சுப் பதவிகள் தொடர்பாகவோ தானோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ எந்தவித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை.
ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் கோயபல்ஸ் கொள்கையை கடைப்பிடித்து பெரும் போலி ஊடக பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
மக்கள் ஆணை எங்குள்ளது?
தற்போதைய அரசாங்கத்திற்கு தேர்தலுக்கு பயம், முடியுமானால் கிட்டிய காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையோ அல்லது அதிபர் தேர்தலையோ அல்லது தற்போது நிதி ஒதுக்க நழுவி வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையோ நடத்துமாறு தற்போதைய அதிபரிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
அவ்வாறு தேர்தலை நடத்தும் போது உண்மையான மக்கள் ஆணை எங்குள்ளது என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
மக்களின் வாக்குரிமைக்கு பெறுமானம் சேர்க்கும் விடயத்தில் நாம் என்றும் முன்நிற்போம்.
மக்கள் ஆணையற்ற தற்போதைய அரசாங்கத்துடன் பணத்துக்கும் சலுகைகளுக்கும் அமைச்சுப் பதவிகளுக்கும் விலைபோகும் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியிலோ இல்லை. என்றும் மக்கள் ஆணையே உயர்வானது” - என்றார்.
