இலட்சக்கணக்கான ஏழைகள் சமுர்த்திக் கொடுப்பனவில் இருந்து நீக்கம் - இம்ரான் எம்.பி வெளியிட்ட தகவல்
நாடெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான சமுர்த்தி பயனாளிகள் திட்டமிட்ட முறையில் சில அதிகார தரப்பினரால் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
அத்தோடு, “இது பெரும் அநீதி எனவும் மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் இந்த மோசமான செயலை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் “ எனவும் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து அவர் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் சமூர்த்திக் கொடுப்பனவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சமுர்த்திக் கொடுப்பனவு
பெரும்பாலும், சில அதிகார பின்புலத்திலுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் அப்பாவி ஏழை மக்களும் வயிற்றுப் பசியை போக்க பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு ஆறுதலாக இருந்தது.
எனினும், சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்களின் சமுர்த்திக் கொடுப்பனவை நிறுத்துவதற்கு பின்புலத்திலிருக்கின்றனர்.
பட்டினிப் போராட்டம்
மக்களை பற்றி சிந்திக்காத அதிகாரிகள் பலரும் இந்த அநியாயத்திற்கு துணைபோயுள்ளனர். சமுர்த்திக் கொடுப்பனவு பெறுபவர்களே அரசாங்கத்தால் தற்போது வழங்கப்படும் ஒரு சில சலுகைகளை பெற தகுதியுள்ளவர்களாக கணிக்கப்படுகின்றனர்.
எனினும், கூடுதலான பயனாளிகளின் பெயரை நீக்கியமையால் அவர்கள் சலுகைகளை பெற்றுக் கொள்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக அதிகார தரப்பு அநியாயமாக பட்டினிப் போராட்டத்தை முடக்கிவிட்டுள்ளது.
இதனால், அந்த மக்களின் வறுமை நிலைமை மேலும் அதிகரிக்க அரசாங்கம் காரணமாக இருக்கின்றது, அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் இன்று வீதிக்கு இறங்கி தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயத்துக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு நாமும் வலு சேர்க்கவுள்ளோம். அத்தோடு, இவ்விடயத்தில் கண்மூடித்தனமாக நடந்துகொள்ளும் அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.
