காவல்துறையின் மிலேச்சத்தனம் - நன்னடத்தை பாடசாலை காவலாளியின் அதிகார துஸ்பிரயோகம்!
அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலுள்ள சிறுவர்களை பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
வெளி மாகாணங்களைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில், அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கைது செய்யவில்லை
அன்றைய தினமே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அச்சுவேலிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டனர்.
அச்சுவேலிப் காவல்துறையினரால் சிறுவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், நன்னடத்தைப் பாடசாலையின் காவலாளிக்கு தமது பெற்றோர் பணத்தை வைப்பிலிட்டதாகவும் அவரே தப்பிக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் காவலாளி வெளியிலிருந்து சட்டவிரோதமாக பொருள்களைக் கொண்டு வந்து தருவார் என்றும் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளியை பாடசாலை நிர்வாகம் பணி இடைநிறுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் இதுவரை அவரைக் கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
