அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்!(படங்கள்)
புத்தளம் தில்லையடி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த உடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை கிழித்து பாதையில் வீசியுள்ளனர்.
இதனையடுத்து புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் எச்.எம் அஸ்கி என்ற ஆசிரியருக்கு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களில் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் புத்தளம் தில்லையடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள்
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரின் வீட்டின் நுழைவாயிலுக்கு கற்களினால் வீசியுள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து குறித்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். இதன்போது மாணவர்கள் கற்களை கையில் பொத்தி வைத்த நிலையில் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
4 பேர் கைது
காயங்களுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது ஆசிரியரைத் தாக்கிய சில மாணவர்களில் 4 பேர் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
