கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து - கடற்படை அதிகாரியை தேடும் பணி தீவிரம்
அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன கடற்படை அதிகாரியைக் தேடும் பணி இன்று (18) நான்காவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அங்குலானைக் கடற்பகுதிக்கு அப்பால் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, ஓகஸ்ட் 15 ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கடற்படை, இலங்கை விமானப்படை, அங்குலானை காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்புப் பணியின் மூலம், கப்பலில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
விசேட நிபுணர் குழு
இதற்கிடையில், காணாமல் போன அதிகாரியைக் கண்டறிதல், கப்பலை மீட்பது மற்றும் சம்பவத்திற்கான துல்லியமான காரணங்களைத் தீர்மானித்தல் போன்றவற்றுக்காகக் கடற்படையினர் விமானப்படையின் உதவியுடன் விசேட வளங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

ஓகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தீவிர முயற்சிகளைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான கப்பலை வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பணியாளர்கள் வழங்கிய ஆரம்பக் கூற்றுக்களின்படி, அப்பகுதியில் மூழ்கியுள்ள கப்பல் சிதைவுப் பகுதியுடன் (submerged wreck) இக்கப்பல் மோதியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை
இதுவே தற்போது விசாரிக்கப்பட்டு வரும் சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும் எனக் கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து ஆரம்ப விசாரணைகளை நடத்துவதற்காக விசேட நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |