தெவிநுவரவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த ஊர்வலத்தில் பங்கேற்ற காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை (28.07.2026) நடத்தப்பட்ட ஒரு விசேட நடவடிக்கையில் இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹராவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 1,500 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவடி நடனக் கலைஞர்கள் கைது
வருடாந்த ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்கள் பங்கேற்பது தொடர்பாக இரண்டு பாதாள உலகக் குற்றத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது ஆலயத்தின் ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து காவடி நடனக் குழுக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.
பாதுகாப்பு குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்களின் பங்கேற்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பதில் காவல்துறை மா அதிபர் நேற்று முன்தினம் (26) மாத்தறை மாவட்டச் செயலாளருக்குப் பரிந்துரைத்திருந்தார்.
எனினும், நேற்று (27) மாத்தறை மாவட்ட செயலகத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சுச் செயலாளர், பதில் காவல்துறைத் தலைவர் மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்டக் கலந்துரையாடலில், கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து காவடி நடனக் குழுக்களையும் இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
வருடாந்த ஊர்வலம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |