எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்!! ரணிலுக்கு சாணக்கியன் அவசர கடிதம்
தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என சாணக்கியன் இராசமாணிக்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கான இரங்கல் பிரேரணை மீதான விவாதத்தின் போது, நாட்டுக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டதாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து சாணக்கியன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நான் வன்முறையை ஆதரிப்பவன் இல்லை
குறித்த கடிதத்தில், "பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கைகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்து விளக்கமளிக்க வேண்டும்
நான் ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை ஊக்குவித்ததில்லை அல்லது வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை.
அமைதி ஐக்கியம் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தி வரும் அதேவேளை மக்களின் தேவைகள் அபிலாசைகள் குறித்து நான் குரல்கொடுத்து வருகின்றேன்.
தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் தங்கள் தேவைகளை துயரங்களை அபிலாசைகளை கருத்தில் எடுக்க தவறிவிட்டனர் என கருதியதன் காரணமாகவே மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்றே நான் தெரிவித்தேன் நான் வன்முறைகளிற்கு ஆதரவளிக்கின்றேன் என்ற விதத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, தவறாக அர்த்தப்பட்டுள்ளது" என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.