அரச தலைவருடன் இருக்கும் ஒரு சிலர் மனநலம் குன்றியவர்களே! நாட்டில் நிலைமை தொடர்பில் வெளியான எச்சரிக்கைத் தகவல்
அரச தலைவருடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகள் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாகவும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுயான பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா - வலப்பனையில் நேற்றைய தினம் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சரியான விவசாய ஆலோசனைகளை வழங்க முடியாதவர்களே அரச தலைவருடன் உள்ளனர். சேதன பசளை பாவனைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்ட முறையே தவறானது என்கிறோம்.
தற்போது அவர்கள் இது தொடர்பில் பிறப்பித்த வர்த்தமானி முன்பு போல் வாபஸ் பெறபட்டுள்ளது. எனினும் பெரும்போகச் செய்கை தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் நெல் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் பூச்சியமாக மாறும்.
மரக்கறி உற்பத்தியும் அப்படிதான். விளைச்சல் குறைவடைந்ததன் காரணமாகவே மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
தேயிலை உற்பத்தியும் அவ்வாறுதான். எமது தேயிலை வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எனவே இவர்களின் செயற்பாடுகளால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரச தலைவருடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகளே காரணம். எனவே எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆகவே எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் வெடித்து சிதறும் என்பதே உண்மை என்றுமத் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.