சுற்றுலா பயணியாக கூட அமெரிக்காவிற்குள் வர முடியாது - கோட்டாபய தொடர்பில் வெளியானது அதிரடி தகவல்!
கோட்டாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தனது குடியுரிமையை இரத்து செய்து கொண்டார்.
தற்போது குடியுரிமை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கின்றார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முன்னாள் அரசியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு குடியுரிமைக்காக மட்டுமல்ல சுற்றுலா பயணமாக கூட வருகை தர அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முன்னாள் அரசியல் நிபுணர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவுக்கு எதிரான கருத்து
தென்னிலங்கை இணைய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற முற்படும் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவிற்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அவரை அறிவுறுத்தும் வகையிலேயே விசா இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க துதரகம் ஊடகங்களுக்கு அறிவித்தது.
ரணிலின் ஆட்சியை விரும்பும் அமெரிக்கா
காரணம் ஒருவரின் விசா இரத்து செய்யப்பட்டால் பொதுவாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. மேலும் ராஜபக்ச ஆட்சியா அல்லது ரணில் விக்ரமசிங்க ஆட்சியா என்பது அமெரிக்காவிற்கு தேவையில்லை.
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சில வரையறைகள் காணப்படுகின்றன. அதற்கமைவாக செயற்படுபவர்களுடன் அமெரிக்கா இணைந்து செயற்படும்.
அவ்வாறு பார்க்கும் போது ராஜபக்ச ஆட்சியை பார்க்கிலும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியையே அமெரிக்கா விரும்புகின்றது" எனவும் தெரிவித்துள்ளார்.
தயா கமகே தற்போது அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பிரதேசத்தில் வசித்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 1970 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளிவிவகாரம் தொடர்பான அரசியல் ஆய்வாளராகவும் ஊடக ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
மேலும் வெளிவிவகாரங்கள் தொடர்பான கொள்கைகளை கையாளும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின், அமெரிக்கா மற்றும் சிறிலங்கா இடையில் வெளிவிவகார கொள்கை தொடர்பான அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

