நாடு முழுவதும் பாதுகாப்பு - காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்
நாட்டில் நாளை (01) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3,500 காவல்துறை உத்தியோகத்தர்கள்
கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பல வீதிகள் ஒரு வழிப்பாதையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
