விமானப்படை வீரரைக் கடத்திச்சென்று கட்டி வைத்துத் தாக்கிய மர்மக் கும்பல்!
சிறிலங்கா விமானப்படை வீரர் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் எனவும், அடையாளந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு்ள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டி வைத்து தாக்குதலுக்குள்ளான நிலையில், இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விமானப்படை வீரர் வீட்டிலிருந்து நேற்று மாலை கடமைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் இனம்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.
உறுதிப்படுத்திய ஊடகப்பேச்சாளர்
மட்டக்களப்பு பொலனறுவ எல்லைப்பகுதியான அரலகங்வில பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானப்படை வீரரை கடத்திச் சென்ற குழுவினர் அவரின் ஆடைகளை அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த விமானப்படை வீரர் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை கட்டி வைத்திருந்த மரத்தின் அருகே “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழ் மொழியில் எழுதப்பட்ட பதாகை ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
