இனத்தை அழிக்கும் படையாகவே சிறிலங்கா அரச படைகள் செயற்பட்டன!
சிறிலங்கா அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக இருக்கவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அம்பாறை மாவட்டம் வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து வளர்ந்தவர்கள். நேரடியாக எம்மவர்கள் கொலை செய்யப்பட்டதனை அவதானித்தவன் என்ற வகையில் எல்லைக் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டமையை கண்கூடாகப்பார்த்தவன்.
விரட்டிவிரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்
குறிப்பாக அம்பாறை என்ற நகரத்திலும் கூட எங்களுடைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று அங்கு தமிழர்களின் எந்தவொரு குடியுருப்பும் இருந்ததாக அடையாளமே இல்லை என்ற செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.
தமிழர்களின் இன அழிப்பின் அங்கமாக இந்த வீரமுனை படுகொலை நடந்தேறி இருக்கின்றது. கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எல்லைக்கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டி விரட்டி வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
உண்மையில் இலங்கை நாட்டில் தமிழராக பிறந்த எங்களுக்கு இது தான் நிலைமை என்ற செய்தியை உலகத்திற்கு சொல்கின்ற வகையில் இந்த நாட்டை ஆண்ட தலைவர்கள் தொடர்ச்சியாக அழித்து வந்திருக்கின்றார்கள் என்பது உதாரணமாகும்.
1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் எந்தவிதமாக கேள்வி கணக்குமின்றி கொடூரமான முறையில் சமாதானம் நீதியை நிலைநாட்ட வேண்டிய அரச படைகள், இந்த நாட்டில் இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள்.
கல்விமான்களை கொன்ற அரச படைகள்
சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இங்கு வாழந்த தமிழர்களை தேடி தேடி அழித்தார்கள். கல்விமான்களாக இருந்தவர்கள் சமூகத்தில் பற்றுறுதி கொண்டவர்கள். சமூகத்தை வழிநடத்த கூடியவர்களாக இருந்தவர்கள் உள்ளிட்டோரை அரச படையினர் திட்டமிட்டு அழித்திருந்தார்கள்.
ஆகவே நாங்கள் இவ்வாறான நினைவுகளை ஏன் நினைவு கூருகின்றோம் எனில் எதிர்காலத்தில் இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்வதற்குரிய அனைத்து உரிமையும் கிடைக்கப்பெற வேண்டும்.
தொடர்ச்சியாக இந்நாட்டில் தமிழர்கள் அடிமைத்தனத்துடன் தங்களது வாழ்வுரிமையை மறுக்கின்ற சூழலில் வாழ முடியாது என்ற அடிப்படையில் தான் நாங்கள் இந்த நினைவேந்தல்களை நினைவு கூர்ந்து வருகின்றோம்.
அம்பாறை எல்லைக்கிராமங்களில் படுகொலைகள்
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் கொலை செய்யப்பட்ட வரலாறுகளை மறந்து விட முடியாது.
அதன் அடிப்படையில் வீரமுனை மாத்திரமல்லாது சொறிக்கல்முனை ,பெரியநீலாவணை, சவளக்கடை, திராய்க்கேணி, காரைதீவு ,அக்கரைப்பற்று, உடும்பன்குளம், பொத்துவில், வளத்தாப்பிட்டி, மல்வத்தை ,போன்ற பிரதேசத்தில் திட்டமிட்டு எங்களது மக்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை நீங்கள் நினைவு கூர வேண்டும்.
எனவே எங்கள் மக்கள் நிலையான சமாதானத்தை வேண்டியவர்களாக இந்த மண்ணிலே நிலையாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்களாகிய நாங்கள் எமது மக்கள் மீது அக்கறையுடன் தொடர்ச்சியாக எமது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டு இணைந்து பயணிப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
