குளத்திற்குள்ளிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்!
மருதமுனையில் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாகவும் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண்
அம்பாறை – பெரியநீலாவணை- மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதுடைய எம்.ஆர். பஸீரா என்ற பெண், கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், தாய் காணாமல் சென்றமை தொடர்பில் பிள்ளைகளால் பெரிய நீலாவணை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதேச பள்ளிவாசல்களிலும் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து பிரதேச மக்களும் காவல்துறையினரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
சடலமாக மீட்பு
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசாரணை
சம்பவ இடத்திற்கு கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம். பதுர்தீன் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்ரூன் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையில் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.








