விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு கொழும்பு மேல் நீதிமன்று வழங்கிய தீர்ப்பு!
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதி சக்திவாய்ந்த இரண்டு கிலோகிராம் வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகக் கருதப்படும் முத்தப்பனின் கீழ் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தங்கவேலு நிமலன் என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் உள்ளனவா என விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.