இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களைத் தடுக்க முடியாது - மீண்டும் கடுமையான எச்சரிக்கை!
நாட்டில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையில் உள்ள 365 சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களிலும் அன்டிஜன் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் இல்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தால், கொரோனா மரணங்களை தடுக்க முடியாது போகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனைக்கான பொருட்கள் இல்லை
மேலும், பல இடங்களில் PCR சோதனைகளை நடத்துவதற்கு தேவையான பொருட்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, நோயாளிகளின் எண்ணிக்கை, கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிறிய அறிகுறிகளுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது, அவர்களை உறுதிப்படுத்த தேவையான ஆய்வக வசதிகள் இல்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
மரணம் அதிகரிக்கும்
மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்தால், இறப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடியால் இதைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, கொரோனா பரவுவதைக் குறைப்பதற்கான ஒரே தீர்வு, முடிந்தவரை சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதாகும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.