பல நூறு மில்லியன்கள் செலவிட்டுள்ள சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம்! அம்பலமாகிய தகவல்கள்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகம், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் சட்டக் கட்டணங்கள் மற்றும் அது சார்ந்த செலவினங்களுக்காக 681 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ கொடுப்பனவு ரசீதுகளின்படி, இந்த காலப்பகுதியில் சட்டப் பிரதிநிதித்துவத்திற்காக மொத்தம் 681.17 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சம்பந்தப்பட்ட வழக்குகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், வர்த்தக ரீதியிலான தகராறுகள் மற்றும் வரி விவகாரங்கள் ஆகியவற்றுக்காகவே இத்தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திரும்பப் பெறப்பட்டுள்ள வழக்குகள்
இந்த மூன்றாண்டு காலத்தில், அதிகபட்சமாக 2023ஆம் ஆண்டில் 264.6 மில்லியன் ரூபாய் சட்ட விவகாரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் 250.5 மில்லியன் ரூபாயும், 2025ஆம் ஆண்டில் 166 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை, தற்போதைய இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |