நீர்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம்!
தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் தலவாக்கலை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
கொலையா? தற்கொலையா?
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துச் சென்று உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்த்தேக்கத்தில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.