நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ரணிலின் புதிய நகர்வு - வெளியானது சாதகமான அறிவிப்பு!
இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.
இருதரப்பிற்கும் ஒத்துழைப்பு ஏற்படுத்தக் கூடிய அபிவிருத்தி
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு துறைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுப் பணிப்பாளர் சென் சென், பிரதிப் பணிப்பாளர் உத்சவ் குமார் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
