மக்கள் மரணத்தின் வாசலுக்கு செல்லக்காரணமான கோட்டாபய– ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்!
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் வாழ வழியின்றி மரணத்தின் வாசலுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள். மக்கள் வாழ வழி செய்ய முடியாத கோட்டாபய– ரணில் அரசாங்கம் வீட்டுக்குப் போகவேண்டும் என சமூக நீதிக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும் மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு உடனடியாக அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வவுனியா மாவட்ட சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு சார்பாக அதன் செயலாளர் சு.டோன்பொஸ்கோ தனது பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தடையற்ற இறக்குமதியும், தேசிய பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டமையும், தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் யுத்தமாக்கப்பட்டமையும், ஊழல் நிறைந்த நிர்வாகமும் நாட்டின் பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
நீண்ட வரிசையில் மக்கள்
அரிசி, மா, சீனி, பருப்பு முதலான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையுயர்வு, தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். அன்றாட வேலையில் ஈடுபடுவோர் தொழில் வாய்ப்பின்றி வாழ முடியாது தவிக்கின்றார்கள்.
பட்டினி நிலை காரணமாக குடும்பமாக தற்கொலை கூட செய்கின்றார்கள். பெற்றோல், டீசல் மண்ணெண்ணெய் சமையல் எரிவாயு முதலியவற்றின் தட்டுப்பாடு, பதுக்கல் காரணமாக போக்குவரத்து, மீன்பிடி கைத்தொழில், அன்றாட கருமங்கள் மாத்திரமின்றி சமையல் கூட செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
வரிசை உயிரிழப்புகள்
எரிபொருள் வரிசையில் காத்து நின்ற சுமார் 20 பேர் மரணமடைந்துள்ளனர். வயோதிபர், ஊனமுற்றோர், பெண்கள் வரிசையில் காத்திருக்க முடியாது பெருந்துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
வரிசையில் குழந்தையை பிரசவிக்க வேண்டிய துன்பநிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களுக்கான விநியோகத்தில் எவ்வித பங்கீட்டு முறையும் இல்லாததால் வலியோர் வாழவும், எளியோர் சாகவும் கருப்புச் சந்தை பெருகவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் மருந்துப் பொருட்கள் இன்மையால் இலவச மருத்துவம் கல்வி என்பனவும் மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை ஒழுங்கமைக்க முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனும் நாடு தழுவிய மக்களின் கோரிக்கையோடு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கைகோர்த்து நிற்கின்றது.
தோட்டம் அமைத்தல்
நாட்டு மக்களின் பிரச்சினையைத் தீர்க்க தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கவும் ஊழலை ஒழிக்கவும் கூடிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த மக்கள் தங்கள் கரங்களை இறுக கோர்த்துக் கொள்வதோடு தம் சுய பொருளாதாரத்தை மேம்படுத்த குடும்ப சமூக தோட்டங்களை அமைக்கவும் சக மனிதருக்கு உதவும் மன நிலையை வளர்த்துக் கொள்ளவும் இவ்வேளையில் திடசங்கற்பம் கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.
மேலும் இப்பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம்
நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் நடைபெற இருக்கின்றது. இப்போராட்டத்தை வலுவூட்ட இனமத, பேதங்களை கடந்து போராட்டத்தை வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.