உள்ளூர் உற்பத்திக்கு பற்றாக்குறை! சிறிலங்கா அதிபர் குழு எச்சரிக்கை
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின் இலங்கையில் பாரிய போசனைப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு தொடர்பான அதிபர் குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூர் சந்தையில் பால், முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், கோழி உற்பத்தி 12.1 சதவீதமும், கோழி முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்ளூர் சந்தையில் வீழ்ச்சியடைய காரணங்கள்
இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தி துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கால்நடைத் தீவனங்களான மக்காச்சோளம், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான உள்ளீடுகள் மற்றும் எரிபொருள் போன்ற பிற பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக கால்நடைத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அந்த குழு கோரியுள்ளது.
மேலும், விவசாய நடவடிக்கைகளை தொடரவும் வீழ்ச்சியை தவிர்க்கவும் 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று உணவு பாதுகாப்பு தொடர்பான அதிபர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
