மகிந்த - கோட்டாபய பதவிலகல் தொடர்பில் எழுந்த சர்ச்சை - சமல் மற்றும் டிரான் முரண்பாடு!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மற்றும் பிரதமரை நீக்கி விட்டு, அரசாங்கத்தை கவிழ்க்க அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட புலனாய்வு சேவைகள் நடவடிக்கை எடுத்தனவோ என்ற சந்தேகம் இருப்பதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
பொது பாதுகாப்பு சம்பந்தமாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் அமைச்சர் டிரான் அலஸ் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அதிபர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த கொழும்புக்கு 15 ஆயிரம் மக்கள் வருவார்கள் என புலனாய்வுப் பிரிவுகள் அறிவித்திருந்ததாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
புலனாய்வு அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தாத பாதுகாப்பு சபை
எனினும் அதனை விட அதிகளவானவர்கள் கொழும்புக்கு வந்தனர் எனவும் காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு வழங்கிய புலனாய்வு அறிக்கைகள் குறித்து பாதுகாப்பு சபையில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது அமைச்சர் டிரான் அலஸ், விடயத்தை தெளிவுப்படுத்த முயற்சித்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கு இடமளிக்காது, இந்த விடயம் தொடர்பாக கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறைமா அதிபரை பதவி நீக்க கோரிக்கை
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சர் டிரான் அலஸூடன் கருத்து முரண்பாடுகளையும் ஏற்படுத்திக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விடயம் தொடர்பாக ஆளும் கட்சியின் அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கட்டாயம் கலந்துரையாட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறைமா அதிபரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, புலானய்வு சேவைகளை மறுசீரமைக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.