காலி முகத்திடல் தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு!
காலி முகத்திடலில் இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதேவேளை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கிய “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும் காலங்களில் அங்கு இருக்காது எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
காலிமுகத் திடலை நான்கு மாதங்களுக்கு மேல் போராட்டகாரர்கள் பயன்படுத்தியிருந்தனர். எனவே எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
“இது காலிமுகத்திடல் அமைந்துள்ள காணியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரசுக்கு சொந்தமான பகுதி. இங்கு நாங்கள் புற்களை வளர்த்திருந்தோம்.
குத்தகைக்கோ முதலீட்டிற்கோ இடம் இல்லை
தற்போது அதனை மீண்டும் அமைக்க வேண்டியுள்ளது. காலிமுகத்திடலுடன் இணைக்கப்பட்டுள்ள புற்தரையாக பராமரித்துச் செல்லவே நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் எதிர்காலத்தில் இந்த பகுதியை எந்த தரப்பிற்கும் குத்ததைக்கு வழங்கவோ, முதலீடுகளுக்காக ஒதுக்கவோ திட்டங்கள் இல்லை” எனவும் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.