அரச உத்தியோகத்தர் தொடர்பில் கோட்டாபய பிறப்பித்துள்ள விசேட உத்தரவு!
அரச ஊழியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை விரைவுபடுத்தவும், அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச சேவை தொடர்பில் விசேட ஆய்வொன்றை முன்னெடுக்குமாறும் அரச தலைவர் அதிகாரிகளுக்கு விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
கோட்டாபய விசேட சந்திப்பு
இது தொடர்பில் ஆராய்வதற்காக அரச தலைவர் மாளிகையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் கோட்டாபய ராஜபக்ச இந்த உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் சில முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்கள் ரீதியில் செயற்படுத்துவதன் ஊடாக அதிக அரச ஊழியர்கள் கொழும்பிற்கு வருவதை குறைக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் ஒன்றிணைப்பு
அத்துடன், குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அரச சேவையினை பெற்றுக் கொடுத்து சேவை திருப்தியை அதிகரிக்கும் வண்ணம் ஆய்வை முன்னெடுக்குமாறும் கோட்டாபய பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்போது அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் சில அரச நிறுவனங்களை ஒன்றிணைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.