முக்கிய புள்ளிக்காக நிதி அமைச்சை ஒதுக்கி வைத்துள்ள கோட்டாய!
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக இன்றும் சிலர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட போதிலும் இதுவரை நிதியமைச்சரை நியமிக்கவில்லை.
முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு நிதியமைச்சர் பதவியை வழங்குவதற்காக நிதியமைச்சர் பதவியை அரச தலைவர் வெற்றிடமாக வைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
சம்பந்தப்பட்ட நபரை நிதியமைச்சராக நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே 13 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 7 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
டக்ளஸ் தேவானந்தா, அஹமட் நசீர், பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமேஷ் பத்திரன, மகிந்த அமரவீர, விதுர விக்ரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களில் ரமேஷ் பத்திரன ஏற்கனவே பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
கூடுதல் பொறுப்பாக அவருக்கு இன்று கைத்தொழில் அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிதியமைச்சர் பதவியில் நியமிக்கப்பட உள்ள அந்த முக்கிய புள்ளி யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை என்ற போதிலும் அமைச்சரவையின் முக்கியமான பொறுப்பான நிதியமைச்சர் ஓரிரு தினங்களில் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.