சிறிலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ கொடியை வேஷ்டியாக அணிந்து சென்ற நபர்!
கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகைக்குள் கடந்த 9 ஆம் திகதி சென்றவர்களில் ஒருவர், மாளிகையில் பறக்கவிடப்பட்டிருந்த அதிபரின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த காணொளியில், ஒரு நபர், அதிபரின் கொடியை வேஷ்டியை போல் கட்டிக்கொண்டு செல்வது பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய கொடியுடன் பறக்கவிடப்பட்ட கொடி
இந்த கொடி அதிபர் மாளிகைக்கு வரும் விருந்தினர்களை சந்திக்கும் பிரதான மண்டபத்தில் தேசிய கொடியுடன் பறக்கவிடப்பட்டிருந்து.
இதனை தவிர மேலும் சிலர் அதிபர் மாளிகையில் இருந்த தொன்மை வாய்ந்த பெருந்தொகையான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
புகைப்படங்கள் நினைவு பரிசுகள் திருட்டு
கொடி, புகைப்படங்கள், நினைவுப்பரிசுகள், கலைப்பொருட்கள், வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள், கொடியேற்றும் கம்பம் உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதேவேளை புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க அதிபருக்கான உத்தியோகபூர்வ கொடியை தடை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.