தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கோடிக்கணக்கில் பெறுமதியான பொருள்!
இராமநாதபுரத்திலிருந்து ஒரு கோடி பெறுமதியான கடல் அட்டைகள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கடத்தல் முயற்சியில் இருவர் ஈடுபட்டிருந்ததாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, மற்றுமொருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியா- தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் இன்று காலை ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதோடு ஒருவர் தப்பியோடியுள்ளார்.
இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ மதிப்புள்ள கடல் அட்டைகளை, வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதன் போது பட்டணம் காத்தான் புறவழிச்சாலை பகுதியில் கேணிக்கரை காவல்துறையினர், இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்துகொண்டிருக்கும் போது ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
மற்றொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் காவல்துறையினருக்கு ஏற்பட்ட வலுவான ச்தேகத்திகால் தீவிர விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.