இந்திய தூதுவரிடம் தமிழ்த்தேசிய கட்சிகள் கையளிக்கவுள்ள ஆவணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள பொது ஆவணம் சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் இன்று மாலை கையளிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஐபிசி தமிழ் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய தூதுவருடனான இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
வடக்கு - கிழக்கு, மலையகம் என தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை, பொதுவான அபிலாஷைகளை பிரதிபலிக்கும் பொது ஆவணமொன்று கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணம் கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், இந்திய தூதுவர் அவசரப் பயணமாக டெல்லி சென்றமையின் காரணமாக குறித்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த ஆணவம் இன்று மாலை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.