கொலைகாரன் காசை கொடுத்து காப்பாற்ற சொன்னால் காப்பாற்றுபவர் தான் சுமந்திரன்- கடுமையாக சாடிய டக்ளஸ்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் யார் என்பதை தற்போதைய அரசே தீர்மானிக்கும் ஆனால் நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் அமைச்சர் என்ற ரீதியில் யாழ்-கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு என்னால் முடிந்த சேவையினை செய்வேன் அதில் யாரும் தலையிட முடியாது யாரும் தடுக்கவும் முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஊடகவியலாளரின் கேள்வி
தற்போது கோட்டாபய- ரணில் ஆட்சி இடம்பெறுகின்றது. யாழ் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே நீங்கள் தான் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அது அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். யாரை நியமிக்க தீர்மானிக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஒரு கடமை உள்ளது கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு தமிழ் அமைச்சர் என்ற ரீதியில் எனது யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு என்னுடைய சேவை தொடரும் அதனை யாரும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
சுமந்திரனை சாடிய டக்ளஸ்
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியாளர்கள் கேட்டபோது,
அவருடைய சுபாபம் அப்படி தான் ஒரு கொலை இடம்பெற்றால் கொலைகாரன் காசை கொடுத்து காப்பாற்ற சொன்னால் காப்பாற்றுபவர் தான் சுமந்திரன் எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரதேச செயலர்கள் யாழ் மாவட்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் மற்றும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஏனைய துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டதுடன் அதற்குரிய தீர்வும் காணப்பட்டது.