பலித்ததா ரணிலின் பிரித்தாளும் இராஜதந்திரம் - கைகோர்க்குமா கூட்டமைப்பு; வடக்கில் ஐ.தே.க விஸ்வரூபம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 56 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகளை உருவாக்கியவர்கள் எவரும் இதுவரை நிலைத்திருக்கவில்லை எனவும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, லலித் அத்துலத் முதலி, ருக்மன் சேனாநாயக்க காமினி திஸாநாயக்க என பிரிந்து சென்ற எவரும் வரலாற்றில் நிலைத்திருக்கவில்லை எனவும், அதே நிலைத்தான் சஜித் பிரேமதாசவுக்கும் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பகிரங்க சவால்
மேலும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை என்றால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற 54 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு மேடையில் அமர்த்திக்காட்டுமாறு சஜித் பிரேமதாசவுக்க ரங்கே பண்டார பகிரங்க சவாலும் விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பல குழுக்ககளாக பிளவுபட்டிருக்கிறது. பொன்சேகா அணி, ராஜித அணி, சம்பிக்க அணி என பிளவு பட்டிருக்கிறது. இவர்களை ஒன்றிணைப்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கு முடியாது.
அதனால் அவர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு லக்ஸ்மன் கிரியெல்லவிடம் பொறுப்புக்கொடுத்துவிட்டு, நாடுபூராகவும் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார்.
வடக்கிலும் காலூன்றும் ஐ.தே.க
அடுத்த பொதுத் தேர்தல் இடம்பெறும்போது ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாசவும், லக்ஸ்மன் கிரியெல்லவும் மாத்திரமே இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாணத்திலும் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
