நீதிமன்ற உத்தரவுக்கும் செவி சாய்க்காத மகிந்த!
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபகச, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு பயணத் தடை விதித்து மே 12 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நீதிமன்று உத்தரவு வழங்கியும் அவர்கள் இதுவரை தமது கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போதே மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் கடவுச்சீட்டை இதுவரை ஒப்படைக்கவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்தார்.
மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோர் தங்களுடைய கடவுச்சீட்டு தமது வீட்டில் வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

