பரபரப்பாகும் சிறிலங்கா - 'கோட்ட கோ கம' மற்றும் நாடாளுமன்ற நுழைவாயில்களில் ஆயுதம் ஏந்திய படையினர்!
சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக காலி முகத்திடலில் உள்ள 'கோட்ட கோ கம' மற்றும் நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
காவல் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவு
வெலிக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரி நேற்று விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ அல்லது பொதுக் கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவசர கால நிலை பிரகடனம்
நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும். மேலும் மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றமும் தமது கடமைகளைச் செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் இடமளிக்க வேண்டும். தடுக்க முயற்சிக்க கூடாது.
அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பதில அதிபர் குறிப்பிட்டுள்ளார்.