விமல் - கம்மன்பில இருவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது! வாசுதேவவின் பதவி பறிக்கப்படாமைக்கான காரணம் என்ன?
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்கள் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் அரசாங்கத்தை விமர்சித்து அதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதே இதற்கு காரணம்.
இதன்போது முழு நாடும் ஒரு பாதைக்கு என்ற தலைப்பில் யோசனை திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான 11 கட்சிகளின் அணி இதனை வெளியிட்டது.
இந்த மாநாட்டில் வரவேற்புரையை நிகழ்த்திய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவையும் அவர் வகிக்கும் நீர் வழங்கல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்காரவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தனது அதிருப்தியை வெளியிட்டதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவும் வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் நெருக்கமே இதற்கு காரணம்.
இருவரும் இணைந்து 89-90 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். ஜே.வி.பியின் போராட்டக் காலத்தில் தெற்கில் சிங்கள இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்பில் இருவரும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாசுதேவ நாணயக்கார விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமையை எதிர்த்து, தான் அமைச்சுப் பொறுப்புகளில் கடமையாற்றப் போவதில்லை எனவும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.